Friday, July 1, 2011

கார்ல் மார்க்ஸ்


 கார்ல் மார்க்ஸ் 


அறிவியல் சார்ந்த சமதர்மத்தை வகுத்தவருள் முதன்மை வாய்ந்தவராகிய கார்ல் மார்க்ஸ் 1818 இல் ஜெர்மனியிலுள்ள ட்ரையர் எனும் நகரில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஒரு வழக்குரைஞர். கார்ல் தமது 17 ஆம் வயதில் சட்டம் பயில்வதற்காக பான் பல்கலைக்கழகம் சென்றார். இறுதியில் ஜினா பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பிறகு மார்க்ஸ் பத்திரிகைத் துறையில் நுழைந்தார். கொஞ்ச காலம் கொலோனில் ரைனிஷ் ஸைத்துங் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால், அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே, அவர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் ஃப்ரைட்ரிக் எங்கெல்ஸை சந்தித்தார். அவர்களிடையே தோன்றிய தனி உறவும், அரசியல் நட்பும், ஆயுளின் இறுதிவரை நிலைத்திருந்தது.
விரைவில் மார்க்ஸ் ஃபிரான்சிலிருந்து வெளியேற்றப் பட்டார். பிறகு அவர் பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847 இல் தி பாவர்ட்டி ஆஃப் ஃபிலாசஃபி எனும் தமது முதல் அரிய நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் அவரும் எங்கெல்சும் சேர்ந்து கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோ எனும் நூலை வெளியிட்டனர். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். அவ்வாண்டின் இறுதியில் மார்க்ஸ் கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு அவர் லண்டன் சென்றார். அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.
மார்க்ஸ் பத்திரிகைத் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதிலும் தம் வாழ்வின் பெரும் பகுதியை லண்டனில் ஆராய்ச்சியிலும், அரசில், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். (அந்நாட்களில் எங்கெல்ஸ் தாராளமாக வழங்கிய கொடைகளே மார்க்சும் அவர் குடும்பமும் வாழ்வதற்கு உதவியாக இருந்தன) மார்க்சின் மிக முக்கியமான நூலாகிய டாஸ் காப்பிட்டலின் முதல் தொகுதி 1867இல் வெளி வந்தது. 1883 இல் மார்க்ஸ் இறந்த போது, மற்ற இரு தொகுதிகளும் முடிக்கப் பெறவில்லை. மார்க்ஸ் விட்டுச் சென்ற குறிப்புகளையும், கையெழுத்துப் படிகளையும் எங்கெல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.
மார்க்ஸ் எழுதிய நூல்களே பொதுவுடமையின் கொள்கை முறையான அடிப்படையாகும். 20 ஆம் நூற்றாண்டில் அவ்வியக்கம் அடைந்த பெரும் வளர்ச்சியின் காரணமாக அவர் இப்பட்டியலில் உயரிடம் பெறத் தகுதியுள்ளவராவார். அவருக்கு எந்த இடம் அளிப்பது என்பதுதான் கேள்வி.
உலகின் நீண்டகால வரலாற்றில் பொதுவுடமை எத்தகைய சிறப்பிடம் பெற்றுள்ளது எனும் மதிப்பீடே இக்கேள்விக்கு விடை தரும். பொதுவுடமையின் வளர்ச்சி அண்மை வரலாற்றின் ஒரு பகுதியாகையால், அதைப் பற்றிய திட்டவட்டமான மதிப்பீடு கிடைப்பது அரிது. ஆயினும், பொதுவுடமை எந்த அளவிற்குப் பரவும், எத்துணை காலம் நீடிக்கும் என்பது உறுதியில்லையெனினும், அக்கொள்கை திட்பமாக நிலைபெற்றுள்ளது என்பதும், இன்னும் சில நூற்றாண்டுகளுக்காவது அஃது உலகில் ஒரு முக்கிய ஆற்றலாக விளங்கும் என்பதும் இப்போது புலனாகின்றது.
மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மனித வரலாறு முழுவதுமே மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் சதவீதத்திலும், இத்தனைபேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. இதிலிருந்து பல பொதுவுடமைவாதிகளும், பொதுவுடமையை ஏற்காத சிலரும்கூட எதிர்காலத்தில் மார்க்சியக் கொள்கை உலகெங்கும் வெற்றி பெறுமென நம்புகின்றனர். ஆயினும், வருங்காலத்தில் அத்தகைய ஒரு போக்கு உருவாகுமென நம்புவது அரிது. பல கொள்கைகள், இவ்வுலகில் தழைத்தோங்கிய காலத்தில் முக்கியமானவையாகத் தோன்றின. ஆனால், நாளடைவில் அவை மறைந்து போயின. (மானி நிறுவிய சமயம் இதற்கு ஒரு சுவையான எடுத்துக்காட்டு). 1900இல் திரும்பவும் அரசியலமைப்புக்குட்பட்ட மக்களாட்சியின் அலை வீசத் தொடங்கியது. இதுவே நாளடைவில் வெற்றி பெறுமென நாம் நம்பினாலும், இது நடைபெறுமென உறுதியாகக் கூறமுடியாது.
இன்றைய உலகிலும் வருங்காலத்திலும் பொதுவுடமையின் செல்வாக்கை நாம் ஏற்றுக் கொண்டபோதிலும், பொதுவுடமை இயக்கத்தில் கார்ல் மார்க்ஸ் எத்துணை முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பது கேள்விக்குரியது. சோவியத் அரசாங்கத்தின் இன்றைய கொள்கைகள் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களுக்கேற்ப அமையவில்லை என்பது போல் தோன்றுகிறது. ஹேகலின் முக்கூற்று வாதம் பற்றியும், உழைப்பின் உபரி மதிப்பு பற்றியும் மார்க்ஸ் எழுதினார். அக்கொள்கைகள் சோவியத் அரசாங்கத்தின் இன்றைய அயல்நாட்டு, உள்நாட்டுக் கொள்கைகளைப் பாதிப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய பொதுவுடமை நான்கு முக்கிய கருத்துகளை வலியுறுத்துகின்றது. 1. ஒரு சில செல்வர்கள் பெருஞ் செல்வத்தில் வாழ்கின்றனர். ஆனால் பெரும்பாலான தொழிலாளரோ வறுமையில் வாடுகின்றனர். 2. இந்த அநீதியைத் தவிர்ப்பதற்கு சமதர்ம அமைப்பை நிறுவ வேண்டும்; அதாவது உற்பத்திச் சாதனங்களைத் தனி மனிதருக்குப் பதிலாக அரசாங்க உடைமையாக்க வேண்டும். 3. பெரும்பாலும் இவ்வமைப்பை நிறுவும் நடைமுறை வழி வன்முறைப் புரட்சியாகும். 4. இந்தச் சமதர்ம அமைப்பைப் பாதுகாப்பதற்கு பொதுவுடமைக் கட்சியின் வல்லாட்சியைப் போதுமான காலத்திற்குப் பின்பற்ற வேண்டும்.
முதல் மூன்று கருத்துகளில் மூன்றும் கார்ல் மார்க்சின் காலத்திற்கு முன்னே தெளிவாகக் கூறப்பட வில்லை. நான்காவது கூற்று தொழிலாளரின் வல்லாட்சி எனும் மார்க்சியக் கருத்தினின்று பெறப்பட்ட ஒரு பகுதியாகும். ஆயினும், இன்றைய சோவியத் வல்லாட்சி நீண்ட காலம் நீடிப்பதற்கு மார்க்சின் நூல்களைவிட, லெனின், ஸ்டாலின் ஆகியோர் வகுத்த நடைமுறைகளே காரணம் எனலாம். ஆகவே, பொதுவுடமையில் மார்க்சின் முத்திரை பெயரளவில் இருக்கிறதேயன்றி உண்மையில் இல்லை எனவும், அவருடைய நூல்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு வெறும் ஒப்பனைதான் எனவும், அது வேறு வகைகளிலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய கருத்துகளும் திட்டங்களுக்கும் வழங்கப்படும் ஓர் அறிவியல் விளக்கம் தான் எனவும் கூறலாம்.
இவற்றுள் ஓரளவு உண்மை இருப்பினும், இவற்றை முற்றிலும் ஏற்க முடியாது. எடுத்துக்காட்டாக, லெனின் தாம் மார்க்சின் கோட்பாடுகளைப் பின்பற்றியதாக மட்டும் கூறவில்லை; மார்க்சின் நூல்களைப் படித்து , முற்றிலும் அக்கொள்கைகளை ஏற்று, அவற்றைத் தாம் பின்பற்றுவதாக நம்பினார். இதுபோலவே மா-சே-துங்கும் பிற பொதுவுடமைத் தலைவர்களும் நம்பினர். சிலர் மார்க்சின் கருத்துகளைத் தவறாகப் புரிந்திருக்கலாம் அல்லது விளக்கியிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், இதுபோலவே கிறிஸ்து நாதர், புத்தர், முஹம்மது நபி ஆகியோரின் கருத்துகள் பற்றியும் கூறலாம். சீன, சோவியத் அரசாங்கங்களின் எல்லா முக்கிய கொள்கைகளும் கார்ல் மார்க்சின் நூல்களிலிருந்து நேராகப் பெறப் பட்டவையாக இருக்குமானால், மார்க்ஸ் இப்பட்டியலில் இன்னும் உயரிடம் பெற்றிருப்பார்.
பொதுவுடமை அரசை உண்மையிலே நிறுவிய நடைமுறை அரசியல்வாதியான லெனின் தாம் பொதுவுடமையை உலகின் பல பகுதிகளின் அடிப்படை அரசியல் தத்துவமாக்கிய பெருமையுடையவரென நாம் கருதக்கூடும். அக்கருத்து ஏற்புடையதன்று எனச் சொல்ல முடியாது. லெனின் உண்மையிலே மிகச் சிறப்பு வாய்ந்தவர். ஆயினும், என் கருத்தின்படி, லெனினின் சிந்தனையை மட்டுமல்லாமல், பல பிற பொதுவுடமைத் தலைவர்களின் சிந்தனையையும் பெரிதும் கவர்ந்து மாற்றிய கருத்துகளை எழுதிய மார்க்ஸே மிகச் சிறப்பு வாய்ந்தவர்.
மார்க்சிய கொள்கையை வகுத்த பெருமை கார்ல் மார்க்சையும் எங்கெல்ஸையும் சாரும் எனவும் வாதிடலாம். அவர்கள் இருவருமே கம்யூமிஸ்ட் மெனிஃபஸ்டோவை எழுதினர். டாஸ் காப்பிட்டலுக்கு இறுதி வடிவம் வழங்குவதில் எங்கெல்ஸ் பெரும் பங்கு பெற்றார் என்பதும் உண்மை. இருவரும் தனித்தனியே தம் பெயரில் நூல்கள் எழுதிய போதிலும், அவர்களது அறிவார்ந்த ஒத்துழைப்பு எத்துணை நெருக்கமாக இருந்ததென்றால், அவர்கள் இருவரும் இணைந்து ஆக்கிய படைப்புகளை ஒரு கூட்டுச் சாதனையாகவே கருதலாம். இந்நூலில் மார்க்சையும் எங்கெல்சையும் பற்றி ஒன்றாகவே விளக்கியிருக்கிறேன். ஆனால் இருவரும் மார்க்சின் பெயரிலேயே இப்பட்டியலிலே இடம் பெற்றுள்ளனர். ஏனெனில் (நான் சரியாக நினைப்பது போல்) மார்க்ஸ் பொதுவாக இவ்விருவருள் முதன்மையான பங்காளியாகக் கருதப்படுகிறார்.
இறுதியாக, மார்க்சின் பொருளாதாரக் கொள்கை தவறானதெனப் பலமுறை கூறப்படுகின்றது. வருங்காலத்தில் நிகழுமென மார்க்ஸ் கூறியவற்றுள் பல நிகழவில்லை என்பது உண்மையே. எடுத்துக்காட்டாக, முதலாளித்துவ நாடுகளில் காலப்போக்கில் தொழிலாளர் வறுமை நிலையடைவார்கள் என்றார். இது நடைபெறவில்லை என்பது தெளிவு. நடுத்தர வகுப்பு ஒழிந்துவிடுமென்றும், அதில் பலர் தொழிலாளராக மாறிவிடுவாரென்றும், ஒரு சிலர் மட்டும் முதலாளிகளாக உயர்வாரென்றும் அவர் கூறினார். இதுவும் நடைபெறவில்லை என்பது உண்மை. தொழில் இயந்திரமாவதால் முதலாளிகளின் லாபம் குறையுமென்று அவர் நம்பியதாகத் தெரிகின்றது. இது தவறு மட்டுமல்லாமல் மடமையுமாகும். மார்க்சின் பொருளாதாரக் கொள்கைகள் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம். ஆனால் அதற்கும் அவரால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கும் சம்பந்தமில்லை. ஒரு தத்துவ அறிஞரின் சிறப்பு அவருடைய கருத்துகள் மக்களுக்கு செயலூக்கம் அளிப்பதைத்தான் பொறுத்துள்ளது. அவ்வடிப்படையில் பார்க்கும்போது, மார்க்ஸ் பெருஞ்சிறப்புடையவர் என்பதில் ஐயமில்லை.
Print Friendly and PDF