இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.
அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் என்ற இடத்தில் உமாயூன், ஹமீதா பானு பேகம் தம்பதியினருக்கு கி.பி1542 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி மகனாகப் பிறந்தார். பிறந்ததும் அக்பருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாருக்தீன் என்பதாகும். பின்னர் அவரை ஜலாலுதீன் முகம்மது அக்பர் என அழைத்தனர். அக்பர் பிறந்த சமகாலத்தில் தந்தை உமாயூன் தன் நாட்டினை இழந்திருந்தார். தனது குடும்பத்தை காந்தஹாரில் இருக்கும்படி பணித்துவிட்டு உமாயூன் பாரசீகம் சென்றார். பாரசீக மன்னரின் உதவியுடன் தன் இளவல் அஸ்காரியை வென்று காந்தஹாரினைக் கைப்பற்றிக் கொண்டார். 1545 முதல் அக்பர் தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். அக்பர் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை. அதேவேளை வேட்டையாடல், போர்ப்பயிற்சி செய்தலில் ஆர்வம் காட்டினார்.
உமாயூனின் சகோதரன் ஹிண்டால் மடிந்தபோது அக்பர் (9ஆவது வயதில்) கஜினியின் ஆளுநராக நியமனம் பெற்றதுடன் ஹிண்டாலின் மகளையும் திருமணம் செய்தார். உமாயூன் டெல்லியின் அரசனானதும் (கி.பி1555) அக்பர் லாகூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இளம் வயதான அக்பரின் பாதுகாவலனாக பைராம்கான் அமர்த்தப்பட்டான். உமாயூன் 1556 ஆம் ஆண்டு இறந்தபோது ஆட்சிப் பொறுப்புக்கள் அக்பரிடம் வந்து சேர்ந்தது. 1556 ஆம் ஆண்டு மாசி மாதம் 14ஆம் திகதி அக்பர் டெல்லியின் அரசனாக முடிசூடிக்கொண்டார்.
அக்பர் ஆட்சிப்பீடம் ஏறியபோது பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. உமாயூன் இறந்தபோது டெல்லி, ஆக்ரா பகுதிகளை ஹேமு (அடில்ஷாவின் தளகர்த்தா) என்பான் கைப்பற்றிக் கொண்டான். பஞ்சாப் தனக்கு சொந்தமென சிகந்தர் ஷா என்பான் உரிமை பாராட்டினான். மிர்ஸா ஹகீம் என்பான் (அக்பரின் உறவினன்) காபுலில் தனியரசர் போல் ஆட்சியை முன்னெடுத்தான். முகம்மது அடில் ஷா, இப்ராஹிம் ஷா என்போர் அக்பரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டனர். பிற மாநிலங்களை ஆட்சி செய்தவர்களும் அக்பருக்கு கட்டுப்படாது செயற்படத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் இடைவிடாத போரினால் நாட்டிலும் பஞ்சம் மலிந்தது. இவை பதின்மூன்று வயது மட்டுமே நிரம்பிய அக்பருக்கு பெரும் சவாலாக காணப்பட்டன. இருப்பினும் பாதுகாவலர் பைராம்கானின் துணையுடன் நாட்டின் ஆட்சியை சிறப்புற நடத்த முயன்றார்.
அக்பரது சிறப்பினை அறிந்து கொள்ள அவரது ஆட்சிமுறை பற்றி நோக்குவது சாலச்சிறந்தது. அவரது ஆட்சி அரேபிய, பாரசீக ஆட்சிமுறைகளைப் பின்பற்றியதாய் அமைந்திருந்தது. துறைகளின் அமைப்பு, மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களின் அதிகார வரம்புகள் முதலானவை அயல்நாட்டு தொடர்பினால் ஏற்பட்டவையாகும். அரசாங்க அலுவல்கள் பற்றிய முடக்கல் போக்கு வரவுகள் அதிகமிருந்தமையால் இதனை 'எழுது தாளினாலான ஆட்சி' என்றும் கூறுகின்றனர்.
அக்பர் நிருவாகத் தலைவராக காணப்பட்டர். சகல துறைகளும் இவருக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டன. தனக்கு நிருவாக விடையங்களில் உதவிபுரிய அமைச்சரவை ஒன்றினைக் கொண்டிருந்தார். அமைச்சரவையில் முதலமைச்சர், நிதியமைச்சர், இராணுவ அதிகாரி, சமயத்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, முதலானோர் இடம்பெறுவர். அவர்களின் நியமனம், ஊதியம், பதவி உயர்வு, பதவி நீக்கம் தொடர்பான அதிகாரங்கள் யாவும் மன்னரிடமே காணப்பட்டது. அக்பரிற்கு ஆலோசனைகள் கூற மஜ்லிஸ் என்ற சபை காணப்பட்டது. ஆட்சிமுறைச் செய்திகள், இராணுவ அலுவல்கள், பொதுச்செய்திகள் தொடர்பான ஆலோசனைகளையும் முடிவுகளையும் கூற மொத்தம் இருபது உறுப்பினர் கொண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மஜ்லிஸ் சபை செயற்பட்டது.
மாநில நிருவாக அமைப்பினை நோக்குவோமாயின் அரசானது பதினைந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இவை 'சுபாக்கள்' என்று அழைக்கப்பட்டன. சுபாவின் அதிகார் 'சுபேதார்' என அழைக்கப்பட்டார். இவரின் கீழ் திவான், சதர், அமில், பிடிக்சி, போஸ்தார் முதலிய அதிகாரிகள் பணியாற்றினர். ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் பௌஜ்தார், அமால் குஸார், பிடிக்ச்சி, வட்ட அதிகாரிகள் முதலானோர் காணப்பட்டனர். இதை விடுத்து கருவூலக் காப்பாளரும் காணப்பட்டார். இவருக்கு பொருளாளர் என்ற பிறிதொரு பெயரும் உண்டு.
நகராட்சி முறையினை நோக்குமிடத்து அதில் 'கொத்வால்' என்ற அதிகாரி முக்கியத்துவப்படுத்தப்படுகிறார். கொத்வால் மத்திய அரசால் நியமிக்கப்படுவார். இவர் சிறு நகராட்சிகளைக் கவனிக்க மாவட்ட வருவாய் அதிகாரிகளை நியமிப்பார். நகரங்கள் ஒவ்வொன்றும் பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அதிகாரிகளை கொத்வால் நியமிப்பார். நகரினை கண்காணித்தல், விலை நிர்ணயத்தை பேணல், குற்றச் செயல்களைத் தடுத்தல், இறைச்சிக் கடைகளைக் கட்டுப்படுத்தல் என பல கடமைகளில் கொத்வால் கவனம் செலுத்த வேண்டும்.
தன்னாட்சி ஊர் பொதுநல மன்றங்களின் சிறப்பான செயற்பாடானது அக்பரது ஆட்சியிலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஏனெனில் சுல்தானியராட்சியில் இம்முறை காணப்பட்டிருந்தாலும் இம்மன்றங்களிலிருந்து வருமானம் கிடைக்காமையால் சுல்தானியர்கள் அதனை தனித்தியங்க விட்டனர். ஆனால் அக்பர் ஊர் ஐவராயங்களை சட்டப்படி அனுமதித்தார். அக்பரது தலையீட்டால் ஊராட்சி மன்றங்கள் தகுதி, மதிப்பு பெற்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொது நலமன்றம் ஒன்று காணப்பட்டது. அம்மன்ற நிருவாகக் குழுவில் ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் காணப்பட்டனர். ஊர் பொது நிருவாகம், பாதுகாப்பு, துப்பரவு, நீதி, நீர்ப்பாசனம், மருத்துவம் என பல தரப்பட்ட பணிகளை இம்மன்றங்கள் புரிந்தன.